Monday, November 3, 2014

SERICULTURE WIPED OUR POVERTY -"குடும்பத்துல பசி பட்டினி இல்லிங்க அதுக்கு காரணம் பட்டு பூச்சிங்க" - SERICULTURE WIPED OUR POVERTY

கிழக்கு தொடர்ச்சி 
மலையில் நபார்டு வங்கியின் மலைவாழ் மக்கள் 
மேம்பாட்டுத் திட்டம்  

குடும்பத்துல பசி பட்டினி இல்லிங்க

அதுக்கு காரணம்

பட்டு பூச்சிங்க


கண்ணம்மா க/பெ வெள்ளையன், 

(வெள்ளித்தாதங்கொட்டாய், ஜவ்வாதுமலை, திருவண்ணாமலை 

மாவட்டம்)

(31.10.2014 அன்று அகில இந்திய வானொலி பேட்டிக்காக எடுத்த ஒலிப்பதிவின் சுருக்கம்)

என் பெயர் கண்ணம்மா. எனக்கு 42 வயசு. ரெண்டு குழந்தைங்க. எங்க வீட்டுக்காரர் பெயர் வெள்ளையன். வெள்ளித்தாதன்கொட்டாய் எங்க ஊர். ஜம்னமரத்தூருக்கு பக்கம்.

மஞ்சள் பட்டுப் புழுதான் ஆரம்பத்துல வள்த்தோம். இப்போ வெள்ளைப் புழு வளக்கறோம். ஏன்னா வெள்ளைக் கூண்டுக்கு வெலை ஜாஸ்தி.

வி.1 மல்பெரி செடியை அரை ஏக்கர்ல போட்டு இருக்கோம். 'ஐப்பிரிட்' ரகம்னு சொன்னாங்க. செடி சூப்பரா இருக்கும். இலை மடல் மடலா இருக்கும்.

ஒரு நாளைக்கு ரெண்டு தடவை தழை போடணும். எளம் புழுவுக்கு அதை நறுக்கி போடணும். வளந்த புழுவுக்கு கிளை கிளையா வெட்டிப் போடணும். இந்த வேலைய நாந்தான் பாத்துக்குவேன்.

பட்டு பூச்சி வளக்கறதுல வேலை அதிகம்னு சொல்லுவாங்க. அது அந்தக்காலம். புது முறையில வேலை ரொம்ப குறைச்சல். நான் வேலை பாக்கறது காலையில  ஒரு மணி நேரம், சாயங்காலம் ஒரு மணி நேரம். அவ்ளோதான். வேலையும் கஷ்டமில்ல.

முட்டை வாங்கி வளத்தா 28 நாள். 'சாக்கி' வளத்தா 15 நாள்ல அறுவடைக்கு வந்துடும்.. ரெண்டு ஜொரம் வரைக்கும் வளந்த எளம் புழுதான் 'சாக்கி'. பட்டுப் பூச்சி ஆபீஸ்ல இப்பொல்லாம் 'சாக்கி'தான் குடுக்கறாங்க.

பூமி ஆபீஸ் மூலமா திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு  கூட்டிகிட்டு போனாங்க. அங்க 100 முட்டை வளத்து ஒரு மாசத்துல 40 ஆயிரம் சம்பாதிக்கற விவசாயிகளப் பாத்தோம். அவுங்க அனுபவத்தை கேட்டு தெரிஞ்சுகிட்டோம். இப்பொ எங்களுக்கு நம்பிக்கை வந்திருக்கு. எங்களாளலயும் அதேமாதிரி சம்பாதிக்க முடியும்.

எங்களுக்கு திட்டத்து மூலமா கட்டிக் குடுத்திருக்கும் ஷெட்'டுல 120 முட்டை வரைக்கும் வளக்க முடியும். 120 முட்டய வச்சி சராசரியா 60 கிலோ கூண்டு அறுவடை பண்ணலாம். வெள்ளக் கூண்டு 300 லருந்து 500 ரூபா வரைக்கும் போகும். மஞ்சள் 200 லருந்து 300 வரைக்கும் விலை கிடைக்கும்.

இப்போ அரை ஏக்கர் போட்டிருக்கோம். அதனால ரெண்டு மாசத்துக்கு ஒரு அறுவடைதான் எடுக்கறோம். இப்போ ஒரு ஏக்கரா போடப்போறோம்.

இது வரைக்கும் எங்க ஷெட் மூலமா 268 கிலோ பட்டு கூண்டு அறுவடை செஞ்சி இருக்கோம். வருமானமா 60 ஆயிரம் ரூபா எடுத்து இருக்கோம்.

இந்த பணத்தை பாக்கணும்னா எங்களுக்கு அஞ்சி வருஷம் ஆகும். நாங்க ஒரு வருஷத்துல சம்பாதிச்சு இருக்கொம்.

அதுக்கு உதவி செஞ்சது நபார்டு வங்கியின் மலை வாழ் மக்கள் மேம்பாட்டு திட்டம்தாங்க. இந்த திட்டத்தின் மூலமா உதவி செஞ்ச நபார்டு,  பட்டு பூச்சி ஆபீஸ், பூமி நிறுவனம் எல்லாத்துக்கும் நாங்க எப்பவும் கடமைப்பட்டிருக்கோம்.

நன்றி;

1.திரு.எஸ்.டி.சுதர்சன், உதவிப் பொது மேலாளர், நபார்ட், திருவண்ணாமலை மாவட்டம்

2.திரு.ராகவராஜகோபால், நிகழ்ச்சி நிர்வாகி, பண்ணை இல்லம், அகில இந்திய வானொலி, சென்னை

செய்தி எண்;84

செய்தித் தொகுப்பு: தேவ.ஞானசூரிய பகவான், இயக்குனர், பூமி அறக்க்ட்டளை, இயற்கை வள பயிற்சி & ஆய்வு மையம், தெக்குபட்டு, வேலூர் மாவட்டம், தமிழ்நாடு



No comments:

மரமாக வளர்ந்து மருந்தாக நிற்கும் மூங்கில் GREEN GOLD:UNLOCKING THE MEDICINAL SECRETS OF BAMBOO

  PHYLLOSTACHYS NIGRA கருப்புமூங்கில் மரமாக வளர்ந்து மருந்தாக நிற்கும் மூங்கில் GREEN GOLD:UNLOCKING THE MEDICINAL SECRETS OF BAMBOO “மூங்...