Thursday, January 30, 2025

THE PRICE OF HUMAN HEAD - A TRUE STORY - மனிதத் தலையின் மதிப்பு - ஒரு உண்மைக்கதை


                மனிதத் தலையின் மதிப்பு

கடிதம்: 4

 அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம் !


குடியரசு தினத்தன்று நான் கதிரி மங்கலம் கிராமத்தில் ஓசை தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த குடியரசு தினவிழாவில் கலந்துகொண்டு, கொடியேற்றி பேசச்  சொன்னார்கள். வழக்கமாக நான் மரங்கள் பற்றி, அல்லது நீர் மேலாண்மை பற்றி, காலநிலை மாற்றம் பற்றி, மற்றும் சுற்றுச்சூழல் பற்றிப் பேசுவேன்.

இந்த முறை இந்த மாதிரி பொதுமக்களிடையே பேசும்போது கதைகள் சொன்னால் என்ன என்று தோன்றியது. அதனால் அங்கு  ஒரு கதையுடன் பேசத் தொடங்கினேன்.  அன்று சொன்ன கதையுடன் நான்  இன்றைய கடிதத்தை தொடங்குகிறேன்.

உங்கள் எல்லோருக்கும் மகதப் பேரரசன் அசோகரை தெரியும்,மௌரிய பேரரசின் மூன்றாவது மன்னர், அவர் தான் பிந்துசாரரின் மகன், அவர் தான் சந்திரகுப்தரின் பேரர்.

ஒரு நாள் அசோகர் தனது மந்திரி மற்றும் கொஞ்சம் வீரர்களுடன் குதிரையில் போய்க் கொண்டிருந்தார், எதிரில் ஒரு பத்து பதினைந்து சாமியார்கள் ஒரு குழுவாக காலணிகூட இல்லாமல் கால்நடையாக  வந்து கொண்டிருந்தார்கள்.

அவர்களைப் பார்த்ததும் அசோக மகாராஜா தனது குதிரையிலிருந்து இறங்கி அந்த தலைமைச் சாமியாரின்  பாதங்களில் விழுந்து வணங்கினார், சாமியார் அவரை  அதிர்ச்சியுடன் ஆசீர்வதித்தார். காரணம் அவருடய குழு சாமியார்கள் கூட அவர் காலில் விழமாட்டார்கள்.

பஞ்சைப் பராறி போல இருந்த அந்த சாமியாரின் காலில் பாராளும் மன்னன் விழுந்து வணங்கியது, அசோகரின் மந்திரிக்கு பிடிக்கவில்லை, ஆனாலும் அவர் அமைதியான எரிச்சலுடன் அதனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அதன் பின்னர் அசோகர் தனது அரண்மனைக்கு திரும்பியதும், இதுவரை தன் மனதில் அடக்கி வைத்திருந்த உணர்வுகளை அடக்கமாக அந்த மந்திரி அசோகருக்கு தெரிவித்தார். இல்லையென்றால் அவருக்கு மண்டை வெடித்துவிடும்.

அரசே மன்னிக்க வேண்டும், நீங்கள் அந்த சாமியாரின் காலில் விழுந்து வணங்கினீர்கள், உங்கள் கிரீடம் அந்த சாமியாரின் காலில் பட்டது, அது கூட எனக்கு பெரிதாக தோன்றவில்லை, ஆனால் உங்கள் சிரம் அதாவது உங்கள் தலையும் அந்த சாமியாரின் காலில் பட்டது, அது எனக்கு அவமானமாக இருந்தது, தாங்கள் எவ்வளவு பெரிய சக்கரவர்த்தி ?" என்று சொல்லிவிட்டு அமைதி ஆனார் அமைச்சர்.

அசோகர் அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை. அமைதியாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தார். அதன் பின்னர் சில நாட்கள் சென்றன. ஒரு நாள் மந்திரியை வரச் சொன்னார். மந்திரியார் அசோகரிடம் வந்து "கட்டளை இடுங்கள் மகாராஜா" என்றார். "எனக்கு உடனடியாக ஒரு ஆட்டுத்தலை, ஒரு புலியின் தலை, ஒரு மனிதனின் தலை, மூன்றும் வேண்டும். உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள்" என்று சொல்லிவிட்டு வேகமாக அரசர் அந்த இடத்தை விட்டு அகன்றார்.

மந்திரிக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. அரசர் கட்டளை இட்டு விட்டார் என்ன செய்வது ? யோசித்தபடி, கசாப்பு கடைக்கு போனார். எவ்விதமான பிரச்சனை இல்லாமல் ஆட்டுத்தலை கிடைத்தது. ஒரு பெரிய வேட்டைக்காரன் இருந்தான், அவனிடம் போய் கேட்க அவன் புலித்தலையை ஏற்பாடு செய்து கொடுத்து விட்டான். ஆனால் மனிதத் தலை கிடைப்பது மகா சிரமமாக இருந்தது.

ஒரு வழியாக ஒரு சுடுகாட்டுக்கு பக்கத்தில் இருந்த ஒரு வெட்டியான் வீட்டுக்குப் போனார். இரண்டு நாளுக்கு முன்னால் புதிதாக புதைத்த ஒரு பிணத்தின் தலையை வெட்டி மந்திரியிடம் கொடுத்தான். ஏன் அவனை வெட்டியான் என்று சொல்லுகிறார்கள் என்பது புரிந்தது மந்திரிக்கு.

மூன்று தலைகளையும் எடுத்துக்கொண்டு போய் மந்திரி அரசரிடம் கொடுத்தார். இந்த மூன்று தலைகளையும் வைத்துக் கொண்டு இவர் என்ன செய்யப் போகிறார் என்று யோசித்தபடி மௌனமாக இருந்தார்.

அப்போது அசோகர் சொன்னார், "மந்திரியாரே உங்கள் வேலையை பாதியைத்தான் செய்திருக்கிறீர்கள். இன்னும் பாதிவேலை மீதியாக இருக்கிறது" என்றார்" 

"என்ன செய்ய வேண்டும் அரசே ? உத்தரவிடுங்கள் செய்து முடிக்கிறேன்என்றார். “வேறு ஏதாச்சும் தலை வேண்டுமானாலும் சொல்லுங்கள்” என்று சொல்லவில்லை, மனதில் தோன்றியது.

அப்போது அசோகர் "இந்த மூன்று தலைகளையும் கொண்டு சென்று நல்ல விலைக்கு விற்பனை செய்து விட்டு வாருங்கள்" என்று சொன்னதும், அமைச்சர் ஆடிப் போனார்.

அந்த ஆட்டுத்தலை புலித்தலை மற்றும் மனித தலை மூன்றும் அடங்கிய அந்த பெட்டியை தூக்கிக்கொண்டு, அசோகரிடம் விடைபெற்றுக் கொண்டு தன்   விதியை நொந்தபடி நடந்தார் அமைச்சர்.

அமைச்சருக்கு பழக்கமான கசாப்பு கடைக்குப் போனார், கடைக்காரர் எதுவும் சொல்லாமல் ஆட்டு தலையை வாங்கிக் கொண்டார். அந்தத் தலையை வாங்கவில்லை என்றால் தன் தலை போய்விடும் என்று தெரியும்.

அமைச்சருக்கு மிகவும் தெரிந்த ஒரு பணக்காரரிடம், பாடம் செய்து வீட்டில் மாட்டி வைப்பதற்கு, அந்த புலித்தலையை ஒரு நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்.

அந்த மனிதத் தலையை எங்கு விற்பனை செய்வது எப்படி செய்வது என்று புரியாமல், அமைச்சர் குழம்பிப் போனார். கடைசியாக மன்னரிடம் போய் தன்னால் மனிதத்தலையை மட்டும் விற்க முடியவில்லை என்று சொல்லிவிட்டு தன்னுடைய தலையை தொங்க போட்டுக் கொண்டார்.

அப்போது அசோக மன்னர் சிரித்துக் கொண்டே சொன்னார், “என்னுடைய தலை அந்த சாமியாரின் பாதங்களில் பட்டது என்று என்ன கேட்டீர்கள் ஞாபகம் இருக்கிறதா? “ என்றார் மன்னார். அதற்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் அமைச்சர்.

அதன் பிறகு அமைச்சர்மனிதத் தலைக்கு என்ன மரியாதை என்று இப்போது எனக்குப் புரிகிறது” என்றார்.

ஆக உலகத்தில் மனித தலையின் மதிப்பு எவ்வளவு என்று கண்டுபிடித்த அசோக சக்கரவர்த்தி, போரில் தான் கொன்றுகுவித்த ஒரு லட்சம் மனித உயிர்களுக்கு, பரிகாரம் செய்வதற்காகத்தான், ஊர் முழுக்க குளம் குட்டைகளை வெட்டினார், சாலை நெடுக மரங்களை நட்டார். “  என்று நான் அந்தக் கதையை சொல்லி முடித்தேன்.

 அதன் பிறகு உண்மையாக நாம் இறந்து போன பின்னால் மனித உடலின் மதிப்பு பற்றி விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது, மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு மரங்கள் நட எத்தனை மரங்கள் நட வேண்டும் என்ற கணக்கையும் சொன்னேன். அது பற்றிய தகவல்களை இன்னொரு கடிதத்தில் சொல்லுகிறேன்,

நன்றி வணக்கம்.

பூமி ஞானசூரியன்

--------------------------------------------------------------------------------------------------------

No comments:

மரமாக வளர்ந்து மருந்தாக நிற்கும் மூங்கில் GREEN GOLD:UNLOCKING THE MEDICINAL SECRETS OF BAMBOO

  PHYLLOSTACHYS NIGRA கருப்புமூங்கில் மரமாக வளர்ந்து மருந்தாக நிற்கும் மூங்கில் GREEN GOLD:UNLOCKING THE MEDICINAL SECRETS OF BAMBOO “மூங்...